Translate

Tuesday 14 May 2013

மனதில் இருக்கும் சக்தியை பயன்படுத்துங்கள்

மின் உற்பத்தி நிலையத்தில் தொடரந்து மின்சக்தி உற்பத்தியாகி வருதைப் போன்று,மனதில் ஆக்கச் சக்தி உற்பத்தியாகி வருகிறது.  கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க இறைக்க ஊற்றுநீர் சுரந்து நீர் மட்டம் பழைய அளவுக்கு வந்துவிடுதைப் போன்று,நாம் செலவு செய்யும் சக்தி சமமாக உங்களுடைய மனதில் புதிய சக்தி உருவாகிவிடுகிறது.


சாம்பல் பூத்துக்கிடக்கும் நெருப்பை ஊதி கொழுந்துவிட்டு எரியச் செய்வதைப் போன்று, மனதில் முடங்கிக்கிடக்கும் சக்தியை எண்ணங்களின் உதவியைக்கொண்டு விஸ்வரூபமாக வெளிவரச்செய்ய முடியும்.  சாதாரண எண்ணங்களை நினைத்து வருபவன் பூமியில் நெளியும் புழுவைப் போன்று அவலமாக வாழ்ந்து வருவான்.. பெரிய எண்ணங்களை நினைத்து வருபவன், ராக்கெட்டைப் போன்று சீறிப் பாய்ந்து, மனித இனத்தை முனேற்றப் பாதையில் அழைத்துச்செல்லுவான்..


தன்னிடம் இருக்கும் திரண்ட செல்வத்தை சிறிது கூட பயன்படுத்திக்கொள்ளாமல் சாவைத் தழுவும் கஞ்சனைப் போன்று, நிறைய பேர்கள் தங்கள் மனதில் மறைந்திருக்கும் சக்தியை சிறிதுகூட பயன்படுத்திக் கொள்ளாமல் மிகவும் சாதாரணமான வாழ்க்கை வாழ்ந்து மறைந்து வருகிறார்கள்.  தன் மனதில் இருக்கும் சக்தியை முழுக்கப் பயன்படுத்திக்கொள்ள ஒருவன் பயன்தரும் எண்ணங்களை முதலில் நினைக்க வேண்டும்.

கடினமான உழைப்பின் துணையைக் கொண்டு ஒருவன் தான் நினைத்தவைகளைச் செய்து முடித்து, தன்னை ஒரு சரித்திக் கதாநாயகனாகவோ, மாபெரும் ஆராச்சியாளனாகவோ, உலகம் போற்றும் இலக்கியப் படைப்பாளியாகவோ அல்லது தொழில் சாம்ராஜ்யத்தின் மகா சக்கரவர்த்தியாகவோ தன்னை உயர்த்திக்கொள்ள முடியும்.


எண்ணங்கள் கனவு போன்றவைகள்தான்.. கடினமான உழைப்பின் மூலம்தான் நீங்கள் உங்கள் கனவுகளை நனவாக்க முடியும்.


நிறைய பேர்கள், சுயநலம் கலந்த முன்னேற்றம் தராத எண்ணங்களை அனைத்து நேரமும் நினைத்து வருவதைப் பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒரே மாதிரியான எண்ணங்களை நினைப்பதைத் தவிர்த்து, புதிய மாபெரும் இலட்சியங்களைப் பற்றி நினைத்து வருவதைப் பழகமாக ஏற்படுத்திக்கொள்ளுங்கள்..

இந்தப் பழக்கம் உங்களிடம் இருக்கும் ஆக்கச் சக்தியை பல மடங்களுகளாக அதிகரிக்கும்படி செய்து விடும்.  கற்பனைத் திறனை வளர்த்து, புதிய சிந்தனைகளை நினைத்து வருபவனால்தான், பல சாதனைகளைப் படைக்க முடியும்.

'ஏழ்மையும், சௌகரியங்கள் நிறைந்த வாழ்க்கையும் எண்ணங்களின் குழந்தைகள்தான்' என்று ஒரு அறிஞர் கூறியிருக்கிறார்.. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருபவன், தன் இயலாமையையும், இல்லாமையையும் நினைத்து அழுது புலம்பி கண்ணீர் விட்டுக் கொண்டிருப்பவனாகத்தான் இருப்பான். 'என்னிடம் திறமையிருக்கிறது. மற்றவர்கள் செய்து முடித்திருப்பதை என்னாலும் செய்ய முடியும்' என்ற நம்பிக்கை கலந்த எண்ணங்களை நினைத்து வருபவன், நிறைய பணம் சம்பாதித்து அனைத்து சௌகரியங்களையும் அனுபவித்து வாழ்ந்து வருவான்...

நம் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை நாம் மாற்றிக்கொள்ளும்போது, நம் வாழ்க்கையே முற்றிலும் மாறிவிடுவதை நாம காண முடியும்.

எண்ணங்களுக்கு எல்லையே இருக்கக்கூடாது.  ஆனால் அநேகமாக அனைவரும் தங்கள் எண்ணங்களுக்கு எல்லைகளை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்து வருகிறார்கள். பெரிய எண்ணங்கள்தான் மாபெரும் மாற்றங்களை உருவாக்கும்.. வாழ்க்கையில் முன்னேறி நல்லவைகளைச் செய்ய விரும்புகிறவர்கள், தங்களுடைய எண்ணங்களின் எல்லைகளை விஸ்தரித்துக் கொண்டே செல்ல வேண்டும்.

உங்களுடைய எண்ணங்களின் பிரதி பிம்பமாகத்தான் நீங்கள் இருக்கப் போகிறீர்கள்..

நீங்கள் கடந்த காலத்தில் எப்படிப்பட்ட எண்ணங்களை நினைத்து வந்திருக்கிறீர்கள் என்பதைப ்பொறுத்து நீங்கள் தற்போது வாழ்ந்து வரும் வாழ்க்கை அமைந்திருக்கும். இதுநாள் வரையில் நீங்கள் கண்டு வந்த ஒட்டுமொத்த சிந்தனைதான் உங்களை இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்பதை நாம் முழுவதும் உணரவேண்டும்..

இதைப் போன்றே அடுத்து வரும் நாட்களிலும் நம் எண்ணப்படியே நமது வாழ்க்கையும் அமையும்.

உதாரணத்திற்கு, குமாஸ்தா வேலையே தனக்கு போதும் என்று நினைத்து வருபவன் தன்னை அதிகாரியாக நிச்சயம் உயர்த்திக்கொள்ள முடியாது.

எனவே எண்ணங்களை மேம்படுத்துங்கள்.. உங்கள் மனசக்தியை முழுவதுமாக பயன்படுத்துங்கள்.. நிச்சயம் வாழ்வில் உயர்நிலையை அடையலாம்.. உலகப் புகழ் பெறலாம்.

No comments:

Post a Comment